முஸ்லிம் என நினைத்து மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை கொலை செய்த பாஜக நிர்வாகி..!
இஸ்லாமியர் என்ற சந்தேகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் மீது பாஜக நிர்வாகி சரமாரியாக தாக்குதல் நடத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ரட்லம் மாவட்டம் சார்ஸி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பன்வாரிலால் ஜெயின் (65) மனநலம் பாதிப்புடன் காணப்பட்டுள்ளார். தனது மகனுடன் அவர் தங்கியிருந்தார்.
இதனிடையே, ஒரு கோயில் நிகழ்ச்சிக்காக பன்வாரிலாலை அழைத்துக் கொண்டு அவரது மகன் குடும்பத்தினர் கடந்த வாரம் ராஜஸ்தான் சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் மத்தியப் பிரதேசம் திரும்பும் வழியில் பன்வாரிலால் திடீரென மாயமாகி விட்டார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, பன்வார்லால் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் பன்வாரிலாலின் சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர். தொடர்ந்து, பன்வாரிலால் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சூழலில், பன்வாரிலாலை பாஜக பிரமுகர் சரமாரியாக தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைலாக பரவியது. அதில், நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான தினேஷ் குஷ்வாஹா, சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த பன்வாரிலாலை எழுப்பி, அவரிடம், “உன் பெயர் முகமது தானே..” எனக் கேட்டு தினேஷ் குஷ்வாஹா அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இவ்வாறு சுமார் 14 முறை முதியவரை அவர் பலமாக அறைந்துள்ளார். இதில் சிறிது நேரத்தில் சுயநினைவை இழந்து கீழே சரிந்து பன்வாரிலால் உயிரிழந்தார்.
இந்த வீடியோ மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்த்த பன்வாரிலால் குடும்பத்தினர் தினேஷ் குஷ்வாஹா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், தினேஷ் குஷ்வாஹா மீது கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி உள்ள அவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜக அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.