
கோவை: கண்ணப்பநகர் பகுதியில் பொதுமக்கள் பங்களிப்புடன் சங்கமம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி என்ற பெயரில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளி துவங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 150 உறுப்பினர்களுடன் சங்க விதிகளுக்குட்பட்டு துவங்கப்பட்ட பள்ளி நிர்வாகத்தில் உறுப்பினர்கள் பலர் வெளியேறிய நிலையில் தற்போது 27 பேர் மட்டும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த சூழலில் இன்று பள்ளி நிர்வாக தேர்தல் நடைபெற்றது. அப்போது தற்போது நிர்வாக குழுவில் உள்ளவர்கள் உறுப்பினர்களாக இல்லாத சிலரை பணம் பெற்று கொண்டு வாக்களிக்க வைப்பதாக கூறி உறுப்பினர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனிடையே அங்கு சென்ற பெண் காவல் உதவி ஆய்வாளர் கஸ்தூரி நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு சுமத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பள்ளி நிர்வாகத்தின் முன்னாள் தலைவரான சந்திரசேகரன் என்பவரை கடுமையாக பேசியதுடன் திடீரென தாக்கி இழுத்தார்.
தனியார் பள்ளி நிர்வாக தேர்தலில் பிரச்சினை ஏற்படும் என ஏற்கனவே காவல்துறையினருக்கு தகவல் வந்ததால் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அமைதியாக நடைபெற வேண்டிய தேர்தலை நிர்வாகியை தாக்கி எதிர் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் பெண் உதவி ஆய்வாளர் பள்ளியின் முன்னாள் தலைவரை தாக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.