கல்குவாரி விபத்து.. யாராக இருந்தாலும் நடவடிக்கை – சபாநாயகர் அப்பாவு
கல்குவாரி விபத்து நடந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்து உள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு அறிவித்து ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.

நெல்லை: பொன்னாக்குடி அருகே அடை மிதிப்பான் குளத்தில் கல் குவாரியில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் சிக்கினர் . சுமார் 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூன்றாவது நபர் மீட்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஏற்கனவே இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டு நலமாக உள்ளனர்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் விபத்தில் காயம் அடைந்த 2 நபர்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் பொது நிவாரண நிதியிலிருந்து அறிவித்திருந்தார். இந்த நிலையில் விபத்து நடந்த பகுதியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் , மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகன் மற்றும் விஜய் ஆகியோருக்கு தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியில் அறிவிக்கப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர் தொடர்ந்து சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கல்குவாரி விபத்தில் 6 பேர் சிக்கியதில் 3 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியால் மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டு 3 பேர் மீட்கப்பட்டனர்.
மேலும் 3 பேர் சிக்கியுள்ளனர் அவர்களையும் மீட்கும் முயற்சியில் தீவிரமாக மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர் மூன்றாவதாக மீட்கப்பட்ட செல்வம் என்பவரை இடிபாடுகளில் இருந்து மீட்கும் முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்களும் உதவினர் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது முதல்வர் உத்தரவுப்படி நேரடியாக விபத்து நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு முதல்வர் அறிவித்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு விபத்து நடந்த குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐந்து வருடங்களுக்கு இந்த குவாரி செயல்பட அனுமதி உள்ளது எனினும் தவறு யார் செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரவு மீட்பு பணிகளில் ஈடுபடுவதில் சிக்கல் நிலவி வருகிறது. தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வரும் சூழலில் விபத்து பகுதியில் மீட்பு பணி நடத்துவது சவாலான காரியம். விபத்து நடந்த பகுதியில் அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது இதில் அரசியல் சாயம் பூச வேண்டாம் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தங்கப்பாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.