
நீலகிரி: கீழ் கோத்தகிரி அருகே கொப்பையூர் கிராமத்தில் காட்டு யானை தாக்கி இருளர் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பெருமாள் உயிரிழப்பு.
நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி அருகே உள்ள கொப்பையூர் பழங்குடியின கிராமத்தில் காட்டு யானை தாக்கி இருளர் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த பெருமாள் என்பவர் உழிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பலாப்பழம் சீசன் துவங்கியுள்ள நிலையில் உணவு மற்றும் தண்ணீர் தேடி சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானை கூட்டம் தனியார் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளது. இந்நிலையில் பெருமாள் என்பவர் நேற்று பணிக்கு சென்று தேயிலைத் தோட்டம் வழியாக வீடு திரும்பும் போது தேயிலைத் தோட்டம் அருகேயுள்ள வனப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானை பெருமாளை தாக்கி உள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் இரவு முழுவதும் இவர் வீட்டிற்கு வராத நிலையில் இவரது மகன் மற்றும் ஊர் பொதுமக்கள் இவரை தேடியுள்ளனர்.அப்போது இவர் தேயிலைத் தோட்டம் அருகேயுள்ள வனப்பகுதியில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார்.
உடனே கோத்தகிரி காவல்துறையினருக்கும், கீழ் கோத்தகிரி வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் இரவு நேரங்களில் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.யானைத்தாக்கி பழங்குடியினர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.